Wednesday 7 August 2013

கருணாமிர்தசாகரம் என்னும் கலங்கரைவிளக்கம்

கருணாமிர்தசாகரம்  என்னும்  கலங்கரைவிளக்கம்
-      முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், புதுச்சேரி.

                  மிகப் பழங்காலத்திலேயே இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களுக்கும் தனித்தனியே இலக்கணங்கள் வகுக்கப்பட்டுப் பல நூல்கள் எழுதப்பட்டிருந்தன என்பதும், அவை காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்துபட்டன என்பதும் கி.பி.1892ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்ட இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்  என்ற  நூலின் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழிசையின் தொன்மை, இலக்கணம், வரலாறு, கலைஞர்கள், இசைக் கருவிகள் எனப் பல்வேறு கூறுகளையும் முழுமையாக அறிந்துகொள்ள அடிப்படையாக விளங்குவது சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையே யாகும்.
                  இந் நூலை அடிப்படையாகக் கொண்டு  கிபி. 1917 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் தொன்மை வரலாற்றையும் அதன் சிறப்பியல்புகளையும் முதன் முதலாக விவரித்து ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் மிகப் பெரிய நூலை எழுதிப் பதிப்பித்தார்.  ‘கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூல் - சுருதிகளைப் பற்றியது’ என்றே பண்டிதர் நூலிற்குப் பெயரிடுகிறார். பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிசை குறித்து வெளிவந்ததால் தற்கால இசை நூல்களுள் இதனையே முதல் நூலாகக் கொள்ள வேண்டும், தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக் ‘கருணாமிர்தசாகரம்’ ஒரு கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்து வருகின்றது. ஏனெனில், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல்.
                  ‘தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம். இதனைப் பண்டிதர், “சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்ததென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லு கிறார்கள்” என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இக் குறையைப் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை  பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந் தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும், தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நூணுக்கங்களை யும் ஆய்ந்து அறிந்து கருணாமிர்த சாகரம் நூலை எழுதி, வெளியிட்டார். இந்நூல் பெருந்தாளிள் கால் (A 4) அளவினதாய் 1346 பக்கங்களில் நான்கு பாகங்களைக் கொண்டு அமைந்தது.
                  நூலின் முதல் பாகம், இசையின் பிறப்பு, தமிழிசையின் தோற்றம், தொன்மை, வளர்ச்சி, மூன்று தமிழ் சங்கங்கள், குமரிக் கண்டம், கடல் கோள்கள், கோயில் கல்வேட்டுகள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், இசைப் புரவலர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோரின் நீண்ட  பெயர்ப் பட்டியல்கள் அகர வரிசையில்  தரப்பட்டுள்ளது. ‘இந்திய சங்கீதச்  சரித்திரச் சுருக்கம்’  என்று முதல் பாகத்திற்குப் பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.
                  இரண்டாம் பாகம் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. ஏழிசை எனப்படும் ஏழு சுரங்களுக்கான சுருதி(அலகு)களின் மொத்த எண்ணிக்கை 24 என்றும், தற்போது வழக்கிலுள்ள 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு  நிலைகளில்  விவாதித்து முடிவுரைக்கின்றது.  சாரங்கதேவர் முதலான இந்திய இசை யறிஞர்களின் கருத்துக்கள் மட்டுமின்றி மேலை நாட்டு இசை யறிஞர்களின் கருத்துக்களும் ஆராயப்பட்டுள்ளன. இப்பகுதி முழுமையான இசை இயற்பியல் பற்றியது. இப் பகுதிக்கு, ‘இருபத்திரண்டு  சுருதிகள்’  என்று பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.
                  மூன்றாம் பாகத்தில் தமிழிசை இயல் குறித்த பல செய்திகள் தரப்படுகின்றன. ஏழு சுரங்கள், பெரும் பண்கள், திறப் பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்கால, பிற்கால நூல்களில் கூறப்பட்டுள்ள ராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டுகொள்ளும் முறைகள், வட்டப்பாலை, ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது. இப் பகுதிக்கு, ‘இசைத் தமிழ்ச் சுருதிகள்’ என்று பண்டிதர்  பெயரிட்டுள்ளார்.
                  நான்காம் பாகத்தில் இளங்கோ அடிகள்  குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை,  திரிகோணப்பாலை குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஒப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது. வீணையின் அமைப்பை மனித உடலோடு ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘பூர்வ இந்தியர்களின் நாகரிகமும் அவர்கள் அரசாட்சியும் என்ற ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளது. இசைக் கணிதம் பற்றியும் விளக்கப்படுகிறது. ‘கர்நாடக சங்கீதத்தின்  சுருதிகள்’ என்று பண்டிதர்  இப் பகுதிக்குப் பெயரிட்டுள்ளார்.
                  அக்காலத்தில்  வாழ்ந்த   அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர்,   நெல்லையப்ப பிள்ளை ,   மு. இராகவையங்கார்,     தமிழ்த்  தென்றல்  திரு. வி. க.,  உ.வே.சாமிநாதையர், முதலான தமிழ்ச் சான்றோர்கள் பலரும் இந் நூலுக்குப் பாமாலைகளும் பாராட்டுரைகளும்  சாத்து கவிகளும்  சூட்டி யிருப்பதிலிருந்தே  இப் பெரு நூலின் பெருமை விளங்கும். விபுலானந்தரின் யாழ் நூல் தொடங்கி இன்றளவும் வந்துகொண்டிருக்கும்  இசையியல் நூல்களுக்கெல்லாம் கருணாமிர்த சாகரமே முன்னோடி நூல் என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை.



ஔவை தி.க. சண்முகம்

நாடக வரலாற்று  நாயகர் ஔவை  தி.க. சண்முகம்

தமிழ் வரலற்றில் குறிப்பிடத் தக்க இரண்டு மகத்தான மனிதர்களின் தன் வரலாற்று (சுயசரிதை) நூல்கள் இருபதாம் நூற்றாண்டில்  வெளிவந்தன. ஒன்று அந்நூற்றாண்டின் தமிழ் இலக்கியம், இசை தொடர்பாகவும், மற்றொன்று அந்நூற்றாண்டின் தமிழ் நாடகம் தொடர்பாகவும் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்தன. முதல் நூல் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த  ‘என் சரித்திரம்’. இதனை எழுதியவர் ‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்படும் டாக்டர் உ.வே.சாமிநாதையர். இரண்டாம் நூல் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த  ‘எனது நாடக வாழ்க்கை’.  இதனை எழுதியவர்  ‘முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்’ என்றும், ‘ஔவை’ என்றும் போற்றப்படும் தி.க. சண்முகம் ஆவார்.  தமிழ் உலகில் எல்லோராலும் அன்புடன் உச்சரிக்கப்படும்‘டி.கே.எஸ்.’ என்ற மூன்றெழுத்துக்களுக்கு சொந்தக்காரர்  தி.க.சண்முகம். உ.வே.சா. அக்காலத்தில் வாழ்ந்த  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதியார் முதலான முதுபெரும் அறிஞர்களிடம் தமிழையும் இசையையும் கற்றுத்தேர்ந்து, பல பட்டங்களைப் பெற்று பல்கலைக் கழகத்தின் உயரிய பட்டத்தையும் பெற்றார். சண்முகம் அக்காலத்தில் வாழ்ந்த நாடகத் தந்தை என்றும், தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்  என்றும் இன்றளவும் போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், சதாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், மயிலை. கந்தசாமி முதலியார் ஆகிய பெரும் நாடகப் புலவர்களிடம்  முத்தமிழையும்  கற்றுப் பிற்காலத்தில்  புகழின் உச்சிக்கே சென்றார்.  அந்நாளில் பல்கலைக்கூடங்களாகத் திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நடிகராக ஆறாம் வயதில்  வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய  டி.கே.எஸ். அறுபதாம் வயதில் உலகறிந்த நாடகக் கலைஞராக மட்டுமின்றி நாடகத்திற்கு  இலக்கணமாகவும் திகழ்ந்தார்.  ஏறத்தாழ  55 ஆண்டுகள் ஒரு சிறந்த  நாடகக் கலைஞனாகவே பயணித்த டி.கே.எஸ். 1918 முதல் 1948 ஆம் ஆண்டு  வரையிலான  தம் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதியாக எழுதி வெளியிட்டதே  ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூல் பற்றிய சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் பின் வரும் மதிப்பீடு மிகவும் பொருத்தமானது என்பதுடன் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.
Ø  இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு.
Ø  தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் ‘நாடகக் கலைக் களஞ்சியம்’.
Ø  இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப் பற்ய மிகச் சிறந்த தகவல் நூல்.   
இந் நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்  ‘நாடகத் துறையில்  தொல்காப்பியர்’  என்று டி.கே.எஸ். அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருப்பதற்கு  இந் நூல் தக்க சான்றாகத் திகழ்கிறது. 

தமிழுலகிற்கு நூலின் கொடை :  இந்நூல் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான  நிகழ்வுகளை விவரிப்பதன் ஊடே ஒரு அரை  நூற்றாண்டுத் தமிழ் நாடக வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. நாடகக் கம்பெனிகள் பற்றிய செய்திகளுடன் தொடங்கும் நூல் தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத் திரைப்படக் கம்பெனிகளுடன் நிறைவடைகிறது.
            தமிழ் நாடகம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவோர்க்கெல்லாம் இந்நூலே ஒரு சிறந்த தகவல் தரும் களஞ்சியமாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் குறித்தும், பாய்ஸ் கம்பெனிகள் குறித்தும் வரலாற்று ஆய்வுகளுக்கு டி.கே.எஸ். எழுதியுள்ள நூல்களே அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்கின்றன. சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு, படைப்பு கள், இசைத்திறம், தமிழ்ப் புலமை, நடிப்பாற்றல், பண்பு நலன்கள் என ஒரு முழுமையான படப்பிடிப்பு இந்நூலில் செய்யப்பட்டுள்ளது. இந் நூல் இல்லை யேல் சுவாமிகளின் வரலாறு தமிழுலகிற்கு முழுமையாகக் கிடைத்திருக்காது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
            மேலும், தம் சம காலத்தில் தலை சிறந்து விளங்கிய நாடகக் கலைஞர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை விருப்பு வெறுப்பின்றி ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். மதுரை மாரியப்ப சுவாமிகள், வேலு நாயர், கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள்  தொடங்கி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன்  வரை  நூற்றுக்கும் மேற்பட்ட  கலைஞர்களைப் பற்றித் தன் வரலாற்றில் குறிப்பிடுகிறார் சண்முகம். நாடகத்தில் பங்கு பெறும் பிற கலைஞர்கள், ஆசிரியர்கள், கம்பெனி முதலாளிகள், தொழிலாளர்கள், புரவலர்கள்  என ஒன்று விடாமல் பதிவு செய் யப்பட்ட ஒரு சிறந்த ஆவணமாக விளங்குகிறது இந்நூல். நூற்றுக்கும் மேற் பட்ட  நாடகக் கம்பெனிகள், பாய்ஸ் கம்பெனிகள், ஸ்பெஷல் நாடகக் குழுக் கள் ஆகியன பற்றிக்  குறிப்பிடுவதோடு  நில்லாமல்,  அவை சந்தித்த பல இடர்ப்பாடுகளையும்  அவற்றையும் கடந்து அவை நிகழ்த்திய சாதனைகளை யும் மிகவும் கவனமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். நாடகக் கலைஞர்களுக் கிருந்த சமூக மதிப்பு, வெகுஜன ஆதரவு, கலைஞர்களின் வாழ்க்கை நிலை பற்றியும் விவரிக்கிறது.
            இச்செய்திகளுக்கு இடைஇடையே சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், காந்திஜி, நேருஜி போன்ற தலைவர்களின் தமிழக வருகை, சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்களின் பங்களிப்பு, மகாகவி பாரதியின் பாடல்கள் தேச உடைமை ஆக்கப்பட்ட வரலாறு, அதற்குத் தம்முடைய பங்களிப்பு , இந்திய சுதந்திர தினம், காந்திஜியின்  மரணம்  என வரலாற்றுத் தகவல்கள் ஏராளம், ஏராளம்!      
இவை தவிர, அக்காலத்தில் வாழ்ந்த மாமனிதர்கள், அருளாளர்கள், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்  என அனைவருடனும் அவருக்கு இருந்த நட்பு, தொடர்புகள் பற்றியும் வரலாற்றுப் பின்னணியுடன் நேர்மையாக விவரித்திருக்கிறார் ஔவை சண்முகம்.  பள்ளிப் படிப்பையே அறியாத பாய்ஸ் கம்பெனி நடிகர் பின்னாளில் எழுதிய தமிழ்  நூல்கள்  பல்கலைகழக மாணவர்களுக்குப் பாட நூல்களாக விளங்குவதைவிட  டி.கே.எஸ். அவர்களின் ஆற்றலைப் பறைசாற்ற வேறென்ன வேண்டும். அவருடைய மொழிப் புலமைக்கும்  எழுத்தாற்றலுக்கும் அவருடைய நூல்களே  வாழும் சான்றுகளாகும்.  இந்நூற்றாண்டில்  அவர் தம் நாடக வாழ்க்கையின் இரண்டாம் பகுதியும் அவர் திருமகனார் கலைவாணன் அவர்களால் வெளியிடப்பட வேண்டும்  என்பதே தமிழன்பர் களின்  பெரு விருப்பமாகும்.   
       வாழ்க டி.கே.எஸ். புகழ்!                                             வளர்க நாடகக்கலை!